Friday, December 16, 2011

இருகவிதைகள் - இருளில் ஒளிரும் விழிகள் -புத்திசாலித் தோழர்கள் - யாழினிமுனுசாமி


இருளில் ஒளிரும் விழிகள் 

இருள் நிறம் குறித்தான ஏராளமான வடுக்கள்
உறைந்திருக்கின்றன அவளின் மன ஆழியில் .
இருளில் மட்டுமே அவள்
நிம்மதிப்  பெருமூச்சு விடுகிறாள் .
எந்த ஏளனப் பேச்சும் அப்போதுதான் அவள் செவியை
எட்டுவதில்லை .
சிவந்த தோழி ஒருத்தி
வகுப்பில் கைமீது கைவைத்து
ஒப்பிட்டபோது தொடங்கிய ரணம் அது .
எப்போதாவது மைதீட்ட நேர்கையில்
ஞாபகம் வரத் தவறுவதில்லை
' மைக்கு யாராவது மை வைப்பாங்களா '
என்ற யாரோ ஒருவனின் கேலிக்குரல் .
உதட்டுச் சாயம் பூசுவதை
நிறுத்தியாகிவிட்டது
உறவுக்காரப் பெண்ணொருத்தி
டீ.எம்.கே.(DMK ) கலர் மாதிரி இருக்கு
என்ற நாளிலிருந்து .
வரன்கள் தள்ளிப் போனபோது
நம்பிக்கை வரண்டுபோனாள்.
உள்ளம் புரிந்த ஒருவன்
வெளிச்சம் பாய்ச்சினான் அவள் மனத்தில்.
கட்டிலில் கரைந்தபோது
ஒளிரும் அவள் கண்களை
இருளிலும் காண்கிறான் அவன்.
......................................................................
---------------------------------------------

புத்திசாலித் தோழர்கள் 

வேறெது குறித்தும் கவலைப்படாதவர்கள் .
சமூக மாற்றம் குறித்து மட்டுமே
கனவு கண்டு கொண்டிருந்தவர்கள்.
நகரம் ஆழ்ந்துறங்கும் அதிகாலைப் பொழுதில்
போஸ்டர் ஒட்டியவர்கள்.
புற நகர்களிலும் திரையரங்குகளிலும்
இரகசியக் கூட்டங்கள் நடத்தியவர்கள் .
இரகசியப் பெயர்களில் இயங்கியவர்கள்
தொடர்வண்டியிலும் பேருந்திலும்
உண்டியல் குலுக்கி
தொலைதூரம் சென்று
புரட்சிகர மாநாடுகளில் பங்கு கொண்டவர்கள்.
அவர்களை எது மாற்றியது ?
உழுபவனுக்கே நிலம் சொந்தம்
என்று பேசிய தோழர்கள்
'ரியல் எஸ்டேட் பிசினஸ் '
செய்யப் போந்தது எங்ஙனம்?
முழு நேரக் கட்சி ஊழியனாய்
ஆகா ஆசைப்பட்ட தோழர்
அரசு ஊழியனாய் ' செட்டில் ' ஆனது
எவ்வாறு நிகழ்ந்தது ?
அரசு வேலை கிடைக்காத தோழர்
மன உளைச்சலில் புலம்பிக் கொண்டிருப்பது எதனால் ?
அரசியல் கட்சிகளை ஓட்டுப் பொறுக்கிகள்
என்ற தோழர்கள் ஓட்டுப் பொறுக்கிகளுடன்
திரை மறைவில் கைகோத்தது எப்படி?
எதிர்த்துப் பேசிய கட்சிகளிலேயே
கரைந்துபோய் கொள்கை பரப்புவது
எங்ஙனம் நிகழ்கிறது ?
மொழி
பண்பாடு
தொழிலாளர் வர்க்கம் என
எல்லாவற்றையும் வெற்றுச் சொற்களாய் ஆக்கியது எது ?
பிழைப்புவாதமன்றி வேறெது தோழா !
.....................................................................................
----------------------------------------------------------

1 comment:

  1. இருளில் ஒளிரும் விழிகள் கவி​தையின் க​டைசி வரிக​ளை நீங்கள் ​வேறு ​கோணத்தில் எழுதியிருந்தாலும், ஒரு வாசிப்பில், கவி​தை க​டைசியாக அவ​ளை ஒரு மு​றை சீண்டிவிட்டு முடிவதாகப் படுகிறது.

    "புத்திசாலித் தோழர்கள்" எதார்தத்​​தை ​எந்த பாசாங்கும், இலக்கிய மினுக்குகளும் இல்லாமல் உ​ரையாடலின் இயல்பான ​மொழியில் ​தோலுரிக்கிறது.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete