Friday, June 3, 2011

குறும்பட இயக்குநர்கள் - புதிய தொடர்

தினகரன் ஜெய்....

ழுத்து, ஓவியம், இசை போன்ற நுண் கலைகளைவிடக் காட்சி ஊடகமான குறும்படக் கலை இன்றைய சூழலில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஒருபுறம் சினிமாவுக்கான நுழைவுச் சீட்டாக இக்கலை பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட மறுபுறம் சமூகச் செயல்பாடாகவும் பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். அழகியல் நேர்த்தியுடன் சிலரது சிறுகதைகளும், கவிதைகளும், குறும்படமாக்கப்பட்டுள்ளன.சமூகப்பிரச்சினைகளையும் பலர் விவரணப் படங்களாக்கிச் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த வண்ணமிருக்கின்றனர். அத்தகைய இயக்குநர்களைப் பற்றியும் அவர்களின் குறும்பட அனுபவங்கள் பற்றியும் இத்தொடரில் காணலாம் முதல் அறிமுகமாக தினகரன் ஜெய்.

விடுதலைப் போராட்டக்களத்தில் வெள்ளையனை எதிர்த்து தூக்குமேடை கண்ட வீரத்தமிழர்களான சின்னமருது, பெரியமருது சகோதரர்களைப் பற்றி "மருதிருவர்" எனும் விவரணப்படத்தையும், குற்றப் பழங்குடிகள் சட்டம் பற்றி "ரேகை" எனும் விவரணப்படத்தையும் எடுத்து சமூகச் சிந்தனையாளர்களையும் குறும்பட ஆர்வலர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறார் தினகரன் ஜெய். இவர் இயக்கிய "ரேகை" விவரணப் படம் அண்மையில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வரவேற்பு இவரை மக்கள் தொலைக்காட்சிக்காக 52வாரங்கள் 52விவரணப்படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தந்திருக்கிறது. அனைத்தும் தென்னிந்திய வரலாறு தொடர்பானவை என்பதுதான் நமக்குச் சிறப்புச் செய்தி.

தினகரன் ஜெய் இயக்கிய குறும்படங்களைப் பற்றி...

இவர் இயக்கிய இரண்டு விவரணப்படங்களுடன் தென்னிந்திய குறிப்பாக தமிழக விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையவை. இவர் இயக்கிய முதல் விவரணப்படம் "மருதிருவர்" மருது சகோதர்களான சின்னமருது, பெரியமருது ஆகியோரின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றையும் அவர்கள் கோயில்களுக்கு ஆற்றிய திருப்பணியையும் ஓவியங்களின் மூலமாகவும் ஆவணங்களின் ஊடாகவும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மருதிருவரின் வீரத்தையும் திருப்பணிகளையும் நினைவுகூறவும் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் இப்படம் பயன்படக்கூடும். அடுத்து இவர் இயக்கிய "ரேகை" வீரஞ்செறிந்த இந்திய மக்களை ஒடுக்க பிரிட்டீஷ் அரசு கொண்டுவந்த ரேகை சட்டத்தின் கொடூரத்தைப் பேசுகிறது இப்படம். "ஐரோப்பிய சர்வாதிகாரத்தின் ஆணவத்தையும் அதனால் சிதைந்த இந்திய மக்கள் அவலத்தையும் இப்படம் முன் வைக்கிறது எனும் அறிவிப்புடன் தொடங்கும் இவ்விவரணப்படம் நம்மை நம் வீரஞ்செறிந்த வரலாற்று காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. சாதியும் மதமும் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தன. எனவே ஏகாதிபத்தியம் அவர்களை ஒடுக்க முடிவு செய்தது. பிரான்சில் பிரெஞ்சுபரட்சி நடந்த போது பழங்குடியினரின் பங்களிப்பு அதில் அதிகமிருந்தது. எனவே அவர்களை ஒடுக்க முடிவு செய்து புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதைப்போலவே இந்தியப் பழங்குடி இனத்தவரை ஒடுக்க குற்றப் பழங்குடிகள் சட்டத்தைக் கொண்டுவந்து கொடுமை படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டம் (1911) பிறப்பிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் எதிரொலித்தது. நான்கு முறை இச்சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரத்தை கையகப்படுத்த இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பஞ்சாப், மும்பை, கல்கத்தா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இச்சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வந்தது. கள்ளர் மறவர் அகமுடையவர் என 200க்கும் மேற்பட்ட சாதியினர் குற்ற பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர். பிறமலைக்கள்ளர்கள் இச்சட்டத்தின் கீழ் அதிகமாக கொடுமைபடுத்தப்பட்டனர். இதில் 15,000 பேர் கண்காணிக்கப்பட்டு 33 பேர் குற்றவாளிகளாக தண்டனை பெற்றனர் என இச்சட்டத்தின் கொடூரத்தை உணர்த்துகிறது இப்படம்.

1920 மார்ச் 20இல் பெருங்காமநல்லூர் கள்ளர் இன பெரியவர்கள் ஒன்றுகூடி இந்தச் சட்டத்தை தங்கள் மீது நடைமுறைபடுத்தக்கூடாது என முறையிட்டனர். ஆனால், போல்சோ கள்ளர்களுக்கு எதிராக பிற சாதியினரை புகார் கொடுக்க தூண்டி விட்டது. பிறமலை கள்ளர்கள் ராதாரி சீட்டு வாங்கிக் கொண்டுதான் ஊரில் நடமாட வேண்டும். போலீசுக்கு பிடிக்காதவர்களும் இச்சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 1920 மார்ச் கடைசியில் ரேகை போலீஸ் உத்தரவிட்டது.

1920 ஏப்ரல் 3இல் இச்சட்டத்தை எதிர்த்து மக்கள் பெருங்காமநல்லூர் கலவரம் செய்தனர். இதை அறிந்த இங்கிலாந்து அரசு மக்களை கொடுமையாக ஒடுக்க முடிவு செய்தது. கிளர்ச்சி செய்த மக்கள் போலீசாரால் சுட்டுத்தள்ளப்பட்டனர். இதைக் கண்டித்து படையாச்சி, ஆதிதிராவிடர் என பல சாதியினரும் போராட்டம் செய்தனர். 'கட்டைவிரலை வெட்டிக்கொள், அல்லது சிறைக்குப் போ. ஆனால் ரேகை மட்டும் வைக்காதே!' என முத்துராமலிங்கத் தேவர் போராட்டம் செய்தார். வன்னியகுல சத்திரிய சபா நடத்திய ரேகை ஒழிப்பு சட்ட போராட்டம், செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை நடத்திய ரேகை எதிர்ப்புப் போராட்டம் எனப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. 1947 ஜீன் 05இல் ரேகைசட்டம் ரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு இரத்தம் சிந்தி பெறப்பட்ட சுதந்திரத்தை சாதியும் மதமும் சேர்ந்து இன்னொரு அடிமைதனத்துக்குள் சிறைப்படுத்தப் போகிறது என்பதை மறுக்கமுடியாது என எச்சரிக்கை செய்கிறது இப்படம். குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை வரலாற்றில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சமூகப் பொறுப்புடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


இனி அவருடன்.....

கே : நீங்கள் குறும்படதுறைக்கு வரக்காரணியாக இருந்தது எது?

அடிப்படையில் நானொரு சிறுகதை எழுத்தாளன். 1997-இல் தாமரை இதழில் எனது முதல் சிறுகதையான 'அந்நியன்' வெளிவந்தது. சொல்புதிது, பன்முகம் போன்ற இதழ்களிலும் எனது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. புதியகாற்று, நிழல் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். புதியகாற்று இதழில் சுதந்திர பத்திரிகையாளனாக ( கசநந டயன்உநச) பணியாற்றியபோது 'தேசியத்தின் தற்கொலை' எனும் தலைப்பில் கட்டுரை எழுதும் தயாரிப்பிலிருந்த போது ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. தமிழக விடுதலை வரலாற்றுக்கும் இந்திய விடுதலை வரலாற்றுக்கும் முரண்பாடுகள் நிறைய உள்ளன. 1857இல் நடந்த சிப்பாய் புரட்சியைத் தான் முதல் சுதந்திரப் போராக இந்திய தேசிய கல்வி இலாகா பாடப்புத்தகங்களில் கற்பித்து வருகிறது. அதற்கு முன்பாக 1801இல் திப்புசுல்தான், தீரன்சின்னமலை, மருது சகோதரர்கள் போன்றோர் வெள்ளையரை எதிர்த்து நடத்திய புரட்சியை இந்திய வரலாற்று ஆசிரியர்கள் மறைத்து வருகின்றனர். புலித்தேவன், சுந்தரலிங்கம், வீரபாண்டியகட்டபொம்மன், வேலு நாச்சியார் போன்றோரது போராட்டங்களும் தியாகங்களும் தேசிய அரங்கில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதை பொதுமக்களிடம் கொண்டு செல்லவே தென்னிந்திய விடுதலைப் போராட்டங்களை மையப்படுத்தி விவரணப்படங்களை இயக்கத் தொடங்கினேன். ஜெகமதி கல்வி அறக்கட்டளை சார்பாக தீனதயாள பாண்டியன் தென்னிந்திய வரலாற்றை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் எனபதற்காக நான் இயக்கிய 'மருதிருவர்', 'ரேகை' என்கிற இரண்டு படங்களைத் தயாரித்தார். இப்படியாகத் தான் நான் குறும்படத்துறைக்கு வந்தேன்.

கே : குறும்படம் இயக்குவதற்கான நோக்கம்?

வரலாறுகள் ஒரு தேசத்திற்கு மிக முக்கியம். அவை விருப்பு வெறுப்பின்றி சாதி மத இன வேறுபாடுகள் இல்லாமல் முறையாகவும் சரியாகவும் போதிக்கப்பட வேண்டும் என்பதால் நான் குறும்படங்களை இயக்கி அவற்றைப் பொதுமக்களிடம் கொண்டு செல்கிறேன். இதனூடாக சிறுபகுதியினரிடமாவது விழிப்புணர்வை உண்டாக்க முடியும் என்று நம்புகிறேன்.

கே : எதிர்கால திட்டம் என்ன?

இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளேன். பொருளாதார ரீதியாக அச்சமிருக்கு. போதிய உதவிகள் கிடைத்தால் உலக அளவிலான படமாக அதை எடுப்பேன். இந்தியாவின் நிலைப்பாடு பற்றியும் அதில் வரும். ஆனால், விடுதலைப்புலிகள் பற்றிய விவாதம் அதில் இடம் பெறாது. அதே நேரத்தில் தமிழ்மக்கள் புறக்கணிக்கப்பட்டது பற்றிய வரலாறு அதில் முக்கிய பங்கு வகிக்கும்.

கே : இன்றைய தமிழ்க் குறும்பட /ஆவணப்படச் சூழல் குறித்து உங்கள் கருத்து?

ஆவணப்படங்கள் தமிழில் நிறைய வரவேண்டும். ஆரோக்கியமான பார்வையாளர்களை குறும்பட இயக்குனர்கள் உருவாக்க வேண்டும். இளைஞர்களின் பங்களிப்பு இத்துறைக்கு மிகுதியாகத்தேவை.

கே : சினிமாவில் நுழைவதற்காக 'விசிட்டிங்கார்டாக' குறும்படங்கள் பயன்படுத்துவது குறித்து?

தமிழக சூழலில் சினிமாவில் நுழைவதற்கான ஒரு விசிடிங்கார்டாக தான் குறும்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும். பார்வையாளர்களும் குறைவு. சீரியஸான விஷயத்தையும் பாமர மக்களுக்கும் புரியும்படியாக எடுக்க வேண்டும். குறும்படத்திற்கான சந்தையையும் உருவாக்க வேண்டும். ஐந்து, பத்து பேர்தான் தற்போது குறும்பட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரமாக இயங்கக்கூடிய இன்னும் நிறைய பேர் இத்துறைக்கு வரவேண்டும்.

கே : குறும்படங்களாலும் ஆவணப்படங்களாலும் சமூகத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

குறும்பட மற்றும் ஆவணப்படங்களின் மூலமாக இந்தச் சமூகத்தில் ஒரு சலசலப்பை உருவாக்க முடியும் என நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன் தான் நானும் இத்துறைக்கு வந்திருக்கிறேன். ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்குடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன்,

என்று கூறும் தினகரன் ஜெய் அடுத்த விவரணப்படங்கள் எடுப்பதற்கான முனைப்பில் தீவிரமாக இருக்கிறார்.
nandri:  www.andhimazhai.com
- யாழினி முனுசாமி  



 

No comments:

Post a Comment